மோடியிடம் "ஆசிபெற்றவர்" ஓபிஎஸ்ஸா? இபிஎஸ்ஸா?
ஜூலை 29.,
சென்னை வந்த பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்திக்க ஓ.பன்னிர்செல்வத்துக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டதும், வரவேற்பதற்கு மட்டும் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதியளிக்கப்பட்டதும் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சென்னை: அ.தி.மு.கவின் இரட்டைத் தலைமைகளிடம் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை சர்ச்சைதான் கடந்த இரு மாதங்களிலும் தமிழ்நாட்டின் முக்கிய செய்தியாக வலம் வந்தது. கடந்த ஜூன் 16தேதி அன்று ராயப்பேட்டைவில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்தான் ஒற்றைத் தலைமை குறித்து முதல் முறையாக தீப்பொறி கிளம்பியது.
பதிலுக்குப் பதில்: ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்தில் அன்று கிளம்பிய தீப்பொறி, அதே தலைமை அலுவலகத்திற்கு வெளியே பெரிய கலவரம் வரை சென்றது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையில் அ.தி.மு.க சார்பில் இரண்டு பொதுக்குழுக்கள் நடைபெற்று முடிந்தது. இறுதியாக நடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி கே.பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வாகி, ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும், எம்.பி.,யுமான ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். பதிலுக்கு எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இந்தநிலையில், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் மற்றும் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என அனைத்துப் பதவிகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.,யாக கருத வேண்டாம் என மக்களவை தலைவர் ஓம்.பிர்லாவுக்கு எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதினார். இதற்கு மாறாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு , தேர்தல் ஆணையத்தின்படி ஓ.பன்னீர்செல்வம்தான் கட்சியின் பொருளாளரும், ஒருங்கிணைப்பாளரும் என்று கூறி வந்தனர்.
எது உண்மையான அதிமுக?: இந்தப் பிரச்சனை போய்கொண்டிருந்த மற்றொரு புறம், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தால் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு தமிழக அரசு சார்பில் சீல் வைக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான வழக்கின் தீர்ப்பில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி கே.பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற தீர்ப்பின் மூலம் 'உண்மை அ.தி.மு.க' எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினர்தான் என்று ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. மேலும், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் வேளையில், அதன் கூட்டணி கட்சியான பாஜக யார் பக்கம் என்ற கேள்வி எழுந்தது.
பிரதமர் சென்னை மோடியின் வருகையும்... கிளம்பிய பூதமும்: தமிழ்நாட்டு பாஜக தலைவர்கள் ஆரம்பத்தில் இருந்தே, இது அ.தி.மு.கவின் உட்கட்சி பிரச்சனை எனவும், இதில் பாஜக தலையிடாது எனவும் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில்தான் பிரதமரின் சென்னை வருகை, அரசியல் களத்தில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. சென்னையில் நடந்த 44-ஆவது செஸ் 'ஒலிம்பியாட்' தொடரின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று (ஜூலை 28) சென்னை வந்தார்.
ஜூலை 28 தேதி நேற்று மாலை 5 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, தலைமைச் செயலாளர் இறையன்பு, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பாஜகவினர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வரவேற்ற எடப்பாடி கே.பழனிசாமி - வழியனுப்பிய ஓ.பன்னீர்செல்வம்: அதனைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்வுகளை முடித்துக்கொண்டு இன்று (ஜூலை 29 தேதி ) காலை 11 மணியளவில் சென்னையில் இருந்து குஜராத்திற்கு, புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடியை வழியனுப்பும் நிகழ்வில் பல்வேறு முக்கியப் பிரமுகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகரன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டு பாஜகவின் முக்கியத் தலைவர்கள் உள்ளிட்டோர் அவரை வழி அனுப்பி வைத்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு - உச்சநீதிமன்ற தீர்ப்பு: அதற்கு முன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு 10 நிமிடங்கள், பிரதமர் உடன் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மட்டும் பிரதமர் மோடியைச் சந்தித்து சிறிதுநேரம் பேசினார். குறிப்பாக, சென்னை வந்த பிரதமரை எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேச உள்ளதாக முன்னரே கூறப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே தனியே சந்திக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி கே.பழனிசாமிக்கு நேற்று பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அதே வேளையில், அ.தி.மு.க பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கட்டும் என்றும்; இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரட்டும் என்றும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பொதுக்குழு தொடர்பான வழக்குகளை 3 வாரத்துக்குள் முடித்துவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி யார் பக்கம்: சசிகலா பொதுச்செயலாளராகியபோது, கட்சியில் இருந்து தான் விலகியபோது, பிரதமர் மோடி கூறியதால்தான் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்ததாக முன் ஒருமுறை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்றது, அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் டெல்லி வட்டாரங்களிடம் நெருக்கமாக இருப்பது போன்றவை பிரதமரின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்குதான் என்பது போன்ற கருத்தை வலுசேர்த்தது.
அது மட்டுமல்லாமல், ஜூன்-23ஆம் தேதி நடைபெறயிருந்த முதல் பொதுக்குழுவுக்கு முந்தைய நாள் இரவு, உயர் நீதிமன்றத்தில் விடிய விடிய விசாரணை நடைபெற்று. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. நீதிமன்ற வரலாற்றிலேயே ஒரு உட்கட்சி பிரச்னைக்காக நீதிமன்ற விசாரணை இரவு முழுவதும் நடந்தது இதுவே முதல் முறை என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் வந்தன. மேலும், நாடாளுமன்ற மழைக்காழ கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நெருங்குகிறதா கிளைமேக்ஸ்: இவை அனைத்தும், பிரதமர் நரேந்திர மோடியின் 'ஆசிபெற்றவர்' என்ற பிம்பத்தை ஓ.பன்னீர்செல்வத்துக்கு அளித்து வருகிறது. ஆனால், எடப்பாடி கே.பழனிசாமி தரப்போ இதை முற்றிலும் மறுக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசி வருகிறார் என்றும் ; பிரதமர் ஓ.பன்னீர்செல்வத்தை குறித்து எதுவும் பேசவேயில்லை என்றும் கூறி வந்தனர். இப்படியிருக்க, பிரதமர் நரேந்திர மோடி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இன்றைய பத்து நிமிட சந்திப்பு எடப்பாடி கே.பழனிசாமி கூடாரத்தில் சலசலப்பை உண்டாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் வழியனுப்பும் நிகழ்வில் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டார். மேலும், தமிழ்நாட்டு பாஜகவினர் மத்தியில் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆதரவாளர்களே நெருக்கம் காட்டி வருகின்றனர். எனவே, எடப்பாடி கே.பழனிசாமி தரப்பும் தொடர்ந்து பிரதமரை நெருங்க முயற்சித்து வருவது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
இன்னும் மூன்று வாரங்களுக்குள் பொதுக்குழு தொடர்பான அத்தனை வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரில் யாருக்கு பிரதமரின் ஆதரவு இருக்கப்போகிறது என்பதுதான் தற்போது தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் நிலவும் முக்கியக் கேள்வியாகும்.

.jpg)






