சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிக்கு, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பொள்ளாச்சி மாற்றும் அதன் சுற்று பகுதிகளில் ஏராளமான இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். குற்றவாளிகள் ஐந்து பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஆனால் குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட கைதை, ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும், சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருநாவுக்கரசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பலத்த போலீசார் பாதுகாப்புடன், திருநாவுக்கரசை சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதனை செய்ததில், திருநாவுக்கரசு பிறப்புறுப்பில் வீக்கம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து திருநாவுக்கரசை மருத்துவமனையில் பலத்த போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் வழக்கில் சிக்கிய நபருக்கு பிறப்பு உறுப்பில் பிரச்சினை ஏற்பட்டது, பேசு பொருளாக உருவெடுத்து இருக்கிறது.