அரசு அதிகாரியின் வங்கி லாக்கர்களில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3.39 கோடி பணம், 1.38 கிலோ தங்க நகைகளையும் லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்திருப்பது, பெரும் பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் வசித்து வருபவர் தொழிலதிபர் ஆனந்த். இவருடைய காலி மனையில், வணிக வளாகம் கட்டுவதற்காக, தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் இயங்கி வருகிற நகர் ஊரமைப்பு திட்ட அலுவலகத்தில், கட்டிடம் கட்ட, திட்ட அனுமதி கோரி, அதற்கான ஆவணங்களுடன் அரசு அதிகாரியை அணுகியிருக்கிறார் தொழிலதிபர் ஆனந்த்.
இந்நிலையில், உதவி இயக்குநராக பணிபுரிந்த நாகேஸ்வரன், தன்னிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தஞ்சை மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் தொழிலதிபர் ஆனந்த் புகார் அளித்திருக்கிறார். நாகேஸ்வரனை கையும் களவுமாகப் பிடிப்பதற்கான பணியில் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினர் ஆர்வமாக இறங்கினர். இவர்கள் சொல்லிக்கொடுத்த திட்டத்தின்படி, தொழிலதிபர் ஆனந்த், ரசாயன பவுடர் தடவிய 25 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தை நகர் ஊரமைப்பு திட்ட உதவி இயக்குநர் நாகேஸ்வரனிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, அலுவலகத்தில் மறைந்திருந்த, லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான டீம், நாகேஸ்வரனை சுற்றி வளைத்து, கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து, நாகேசுவரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஊழல் தடுப்பு காவல்துறையினர், அவரை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய, சிறையில் அடைத்தனர். நாகேஸ்வரன் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இவர், தொழிலதிபர் ஆனந்திடம் லஞ்சம் கேட்டதோடு மட்டுமல்லாமல். இதற்குமுன்பு, ஏற்கனவே பலரிடம் லஞ்சம் பெற்று கோடிக்கணக்கில் பணம் மற்றும் தங்கம் குவித்து வைத்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருச்சியில் உள்ள நாகேஸ்வரனின் 3 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அங்குக் கிடைத்த சில ஆவணங்களைக் கொண்டு, திருவானைக்காவல், திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கிகளில் இவரது பெயரிலும், நாகேஸ்வரன் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலும் உள்ள மூன்று லாக்கர்களிலும் சோதனை மேற்கொண்டார்கள். நாகேஸ்வரன் மற்றும் இவரது குடும்பத்தினரின் பெயர்களில் இருந்த வங்கிக் கணக்குகளையும் ஆய்வு செய்தனர். இதில், 3.39 கோடி ரூபாய் பணமும், 1.38 கிலோ தங்க நகைகளும் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், அரசு அலுவலராக பணிபுரிந்து வரும் நாகேஸ்வரனால், எப்படி இவ்வளவு பணத்தையும், நகைகளையும் சேர்க்க முடிந்தது. இவை அனைத்துமே லஞ்ச ஊழல் மூலம் கிடைத்ததுதானா, மேலும், வேறு என்னென்ன குறுக்கு வழிகளில் நாகேஸ்வரன் சொத்து சேர்த்துள்ளார் என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.





