கொடைகானலில் உள்ள சுற்றுலா தளமான தூண் பாறையை மறைத்து கட்டப்பட்டு வரும் மதில் சுவரை அகற்றுமாறு பொதுமக்களால் கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் ஜூலை 25:
கொடைக்கானல் பகுதியானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இவற்றை காண்பதற்கு தனித்தனியாக கட்டணம் செலுத்தி சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களை கண்டு ரசிப்பதற்கு வனத்துறையினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களிலேயே மிகவும் அழகாண சுற்றுலா இடமாக "தூண் பாறை" திகழ்கிறது. பல நேரங்களில் தூண் பாறையியை மேகமூட்டம் மூடி மறைத்துவிடும்.
சுற்றுலாப் பயணிகள் வழக்கமாக சாலையில் செல்லும்போது தூண்பாறை தெரிகிறதா இல்லையா என்று பார்க்குமளவிற்கு வேலி மட்டும் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது, வேலியை அகற்றி வனத்துறையினர் மிகப் பிரமாண்டமான மதில் சுவரை எழுப்பி வருகின்றனர். தற்போது எழுப்பப்படுகிற மதில் சுவரால் தூண் பாறையை சாலையில் இருந்து காண முடியாத நிலை ஏற்படும்.
கட்டாயமாக கட்டணம் செலுத்திய பின்னர் தான் இந்தப் பெரிய மதில் சுவரைத்தாண்டி உள்ளே சென்று "தூண்பாறை" தெரிகிறதா இல்லையா என்று பார்க்க முடியும். கட்டணம் செலுத்தியவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தூண் பாறை மேகமூட்டம் இல்லாமல் காணமுடியும். அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் தூண்பாறையைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பிரமாண்ட மதில்சுவரை அகற்ற வேண்டும், இல்லை எனில் குறைவான உயரத்தில் மதில் சுவரை அமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது எழுப்பப்பட்டு வரும் பிரமாண்ட மதில் சுவரை அகற்றாவிட்டால் போராட்டம் செய்ய இருப்பதாக இயற்கை ஆர்வலர்களும், பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இதுபற்றி கொடைக்கானல் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் டாக்டர் திலீப் அவர்களிடம் கேட்டபோது அவர் கூறியதாவது; இந்த மதில் சுவர் கொடைக்கானலின் இயற்கை அழகினைப் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது உருவாக்கி வரும் மதில் சுவரில் இயற்கையான காட்சிகள், பல வண்ணங்களில் மிகத்திறமையான ஓவியர்களைக் கொண்டு ஓவியங்கள் தீட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காகத்தான் இந்த மதில் சுவர் அமைக்கப்பட்டுகிறது. இந்த மதில் சுவர் பணி முடிவடைந்தவுடன், இதன் அழகினை அனைத்துத்தரப்பினரும் பாராட்டுவார்கள்' என்று அவர் தெரிவித்தார்.

.jpg)