நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப்போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மாணவர்கள் நலன்கருதி சட்டப்போராட்டம் மூலம் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இன்று பொள்ளாச்சி அருகேவுள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார். ஆனைமலை முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமார் உடனிருந்தார். ஆடம்பரம் இல்லாமல், அமைச்சர் வருகிறார் என்பதை இரண்டு நாட்களுக்கு முன்பே, விளம்பர பதாகைகள் வைத்து, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்காமல், அய்யா காமராஜரை நினைவுபடுத்திய எளிமை அமைச்சர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகையை வரவேற்க கட்சிக்காரர்களை அழைக்கவில்லை. பிரியாணி, சரக்கு கொடுத்து பொதுமக்களை அழைத்து கூட்டம் சேர்க்கவில்லை. பொதுமக்களுக்கு இடையிறு செய்யும்படியான அமைச்சருடன் வாகனங்கள் வரவில்லை. தன் நோக்கம் என்னவோ அதை மட்டும் பார்க்க வந்த அமைச்சர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் 600 நாட்களுக்கு பிறகு 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வந்துள்ளனர். நீண்ட காலமாக வீடுகளிலேயே மாணவர்கள் இருந்ததன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்தனர். ஆதலால், பள்ளிகளுக்கு மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்தாலும், பாடங்களை மகிழ்ச்சியுடன் கவனித்து வருகின்றனர்.
நீட் தேர்வு பயத்தில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழகத்தில் நீட் தேர்வு வராமல் இருக்க சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். முதலமைச்சரைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, நீட் தேர்வை ரத்துசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். தயவுசெய்து மாணவர்கள் தற்கொலை செய்யும் எண்ணத்தை கைவிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இப்போது, ஒன்றாம் வகுப்புமுதல் எட்டாம் வகுப்புவரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ அதைவிட மாணவர்களின் உடல்நலம் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.