செம்பரம்பாக்கம் ஏரியில் விநாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தற்போது வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியில் 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள் உள்ளன. இதில், இரண்டாவது மதகு மட்டும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரி திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, உடனடியாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலையே, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 1.30 மணிக்கு 500 கனஅடி நீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, கரையோரம் உள்ள நத்தம், குன்றத்தூர், நந்தம்பாக்கம், பூந்தமண்டலம், வழுதம்பேடு, பழந்தமண்டலம், எருமையூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.