தீபாவளியை கொண்டாட விடிய விடிய மது குடித்த 3 பேர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்
கோவையை அடுத்த பாப்பநாயக்கன்பாளையத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இரவு முழுவதும் மது அருந்திய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவையை அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன்(31), சக்திவேல்(60) மற்றும் முருகானந்தம்(55). இவர்களில் பார்த்திபனும், சக்திவேலும் பெயிண்டராக உள்ளார்கள். முருகானந்தம் தென்காசியை சேர்ந்தவர். இதே பகுதியில் தங்கி சமையல்காரராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் மூவரும் தீபாவளியை கொண்டாடுவதற்காக நேற்று இரவு மது அருந்தி உள்ளனர்.
இதையடுத்து, மூவரும் இன்று காலை 6.30 மணியளவில், மீண்டும் முழு பாட்டில் மதுவை பிளாக்கில் வாங்கியுள்ளனர். அதன்பிறகு, அருந்ததியர் வீதியில் இருக்கும் பட்டத்தரசியம்மன் கோவில் அருகிலுள்ள, பாழடைந்த கட்டிடத்தில் இவர்கள் மூவரும் மது அருந்தி உள்ளார்கள். இதையடுத்து, மது அருந்திய சக்திவேல் வீட்டிற்கு செல்வதற்காக கோவிலுக்கு பின்னால் சென்றுள்ளார். அப்போது, தீடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். அவரை தொடர்ந்து, பாரதியார் சாலையில் சென்ற முருகானந்தமும் உயிரிழந்தார். இரண்டு பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில், அவர்களுடன் மது அருந்திய பார்த்திபன் தனது வீட்டின் அருகே உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு பார்த்திபன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடய அறிவியல் துறையினர் மது அருந்த பயன்படுத்திய பாட்டில் மற்றும் அந்த பகுதியில் உள்ள தடயங்களை சேகரித்து எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து, கோவை பந்தயசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.