அதிமுக கொடியுடன் இன்று ஜெயலலிதா நினைவிடம் சென்று கண்ணீருடன் மரியாதை செலுத்திய வி.கே.சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் எனக் கூறியுள்ளார் அதிமுக ஜெயக்குமார்.
அதிமுகவின் 50வது ஆண்டு தொடக்க விழா நாளை அக். 17-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்றைய தினம் அதிமுக கொடி பொருத்திய காரில், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார் வி.கே.சசிகலா. வி.கே.சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது இதுவே முதல்முறையாகும். தமிழ்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வி.கே.சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்ற அதேநேரத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியபோது, ஜெயலலிதா நினைவிடத்திற்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். அதில் ஒருவர்தான் வி.கே.சசிகலா.
அப்படி இருக்கையில் யானை பலத்தோடு இருக்கும் அதிமுகவை, கொசு தாங்குவதாக சொல்வது நகைச்சுவையாக உள்ளது. வி.கே.சசிகலாவின் நடிப்பிற்கு, ஆஸ்கார் விருதே கொடுக்கலாம். வி.கே.சசிகலாவுக்கு நிச்சயம் அதிமுகவில் இடமில்லை. அமமுகவில் இடம் இருந்தால், அதில் எங்களுக்கு ஆட்சேபமும் இல்லை என்று கூறினார்.