தெய்வங்களின் தேசம் என்று அழைக்கப்படுகிற கேரளா மாநிலத்தில் கனமழையின் காரணமாக 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக, கேரளத்தில் அக்டோபர் 15 இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாதுகாப்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது. அத்தோடு, தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்களை வெளியேற்றும் வேலைகளில் மாவட்ட நிர்வாகமும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு கேரளாவில் கனமழையின் காரணமாக, கடுமையான வெள்ளம் ஏற்பட்டது போல, தற்போதும் பத்தனம்திட்டா பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் அதன் கொள்ளவை எட்டியுள்ளது.
இதையடுத்து, திருவனந்தபுரம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் அணைகளில் நீர் திறப்பு குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையுடன் சனிக்கிழமை அன்று காலைமுதலே பத்தனம்திட்டா, திருவனந்தபுரம் ஆகிய இரு மாவட்டங்களிலும் கடுமையான மின்னல்கள் ஏற்பட்டது.
பொதுமக்கள் அவசரநிலை என்றால் மட்டும் வெளியே வருமாறு திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். நீர்நிலைகளுக்கு அருகே மக்கள் செல்வதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அனந்தோடு அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்திருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கேரளாவில் கனமழையும், 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீசக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.