ஆளும் கட்சியினரால் உயிருக்கு ஆபத்து: - வட்டார வளர்ச்சி அலுவலர் கடிதத்தால் பரபரப்பு
ஆளும் கட்சியினரால் தன் உயிருக்கு ஆபத்து என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி விட்டு, விடுமுறையில் சென்ற குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர். அவர் எழுதிய கடிதம் வெளியானதால் பரபரப்பானது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் சரவணன் என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர், ஆளுங்கட்சியினர் கொடுக்கும் அழுத்தம் காரணமாக 60 நாட்கள் ஈட்டா விடுப்பில் செல்வதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதம், தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அவர் எழுதிய அந்தக் கடிதத்தில், ஆளுங்கட்சியினர் செய்யாத வேலைகளையெல்லாம் சேர்த்து ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற தனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் விதிமுறைகள் மீறியுள்ளதாகவும், சூரிய மின்விளக்கு வைப்பதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது.
அதேபோல, அஜண்டாவில் இல்லாத தீர்மானங்களை, நிறைவேற்றியதாக அதிகாரியை கையெழுத்து போடச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்துகின்றனர். இதையடுத்து, விதிகளைமீறி கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ரத்து செய்துள்ளார்.
இதன்விளைவாக, தனக்கு ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுப்பதால், தன்னால் சரிவர வேலை செய்ய முடியவில்லை. இதனால், ஆளும் கட்சியினரால் தனக்கு இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ மரணம் ஏற்படலாம்.
ஆதலால், தனக்கு அறுபது நாட்கள் ஈட்டா விடுப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாக அரசு அலுவலர் ஒருவர் அறுபது நாட்கள் விடுப்பு கேட்டு கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.