பெண்களே: தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பதை தவிருங்கள் -அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
அக் 18.,
பெண்கள் தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்கும் நேரத்தில் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்துக்கு மாற வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில், ராஜபாளையம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் நூலகத்தை, தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதையடுத்து, விழாவில் உரையாற்றிய தங்கம் தென்னரசு, இந்தியாவிலேயே அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம் அமைக்கப் பட்டுள்ள பெருமை கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்று சுட்டிக்காட்டினார். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், பெண்கள் தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்கும் நேரத்தில் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்துக்கு மாற வேண்டும். பெண்கள் கல்வியறிவு பெற வேண்டுமென்ற பெரியாரின் கனவை, அறிஞர் அண்ணாவும் கருணாநிதியும் நிறைவேற்றியதாக பெருமையுடன் குறிப்பிட்டார்.


