"இல்லம் தேடி கல்வி திட்டம்": முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை
சென்னை அக் 18.,
இன்று முதல் "இல்லம் தேடி கல்வி திட்டம்" செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிற ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும், மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
மேலும், 1ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கல்வித் தொலைக்காட்சி மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினாலும், அவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக தினமும் 1 மணிமுதல் 1 மணி 30 நிமிடம் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டம் குறித்து அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டது. "இல்லம் தேடி கல்வி திட்டம்" இன்று முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில், முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டு இன்று மாலை இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.




