ஆண்டுதோறும் அக்.10-ம் தேதி, மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக மனநல தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் சமத்துவமற்ற உலகில் மனநலம் பேணுதல் என்பதாகும்.
அரசின் திட்டங்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட மனநல திட்டஅலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வ நாயகம் கூறியதாவது:
ஒவ்வொருவருடைய மனநலத்தின் மீது சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும், அதற்கான காரணிகளையும் ஆராய்ந்து மனநலத்தை மேம்படுத்த முடியும்.
இந்த பிரச்சினையானது ஏழை, பணக்காரன், நகரம், கிராமம் என்ற வேறுபாடு இன்றி அனைவரையும் சமமாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அதிகப்படியான கிராம மக்களையும் கொண்ட நம் நாட்டில், நகரங்களில் மட்டுமே மனநல மருத்துவம் எளிதாக கிடைக்கிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் அரசு சாராத தன்னார்வ நிறுவனங்கள் மனநல சேவையை வழங்குகின்றது. இருப்பினும், அவர்களது சேவையானது, பெறப்படும் நன்கொடையின் அளவைப் பொறுத்தே அமைந்துவிடுகிறது.
இவற்றையொல்லாம் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசின் நிதியுதவியுடன், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மனநல திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய திட்டத்தின் மூலம், மனநல நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல், அவசர மற்றும் தொடர் சிகிச்சை, ஆதரவற்ற மனநோயாளிக்கு பாதுகாப்புடன் கூடிய சிகிச்சை மற்றும் மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அத்தோடு, கிராம மக்களுக்கு எளிதாக மனநல மருத்துவம் கிடைப்பதற்காக தொலைதூர மனநல மருத்துவர் பணியிடம் உருவாக்கப்பட்டு, அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மனநலப் புறநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது.
ஆர்.கார்த்திக் தெய்வநாயகம்
ஆதரவற்று சாலையில் சுற்றித்திரியும் மனநல நோயாளிகளை மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் மூலம் மீட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக பல்வேறு துறை அலுவலர்களை உள்ளடக்கி மீட்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், கல்லூரி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தூதுவர் குழுவும் செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வியாழக்கிழமை தோறும் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக மனநல வியாழன் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தலைமை மற்றும் தாலுகா அரசு மருத்துவமனைகளில் மனநல சேவை தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், மனநல திட்டத்தின் மூலமாக நீட் தேர்வு எழுதிய 1.10 லட்சம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தங்களுடைய மனநல சிக்கலை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிக்கிற, குரலற்றவர்களின் குரலாக மாவட்ட மனநல திட்டம் செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
