நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் நான்கு பேரை கொன்றதால், T23 புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கும் பணிகள் 21 வது நாட்களாக தொடர்ந்த வந்த நிலையில், தற்போது T23 புலி பிடிபட்டுள்ளது.
தொடர்ந்து 20 நாட்களாக T23 புலியை உயிருடன் பிடிக்க முடியாமல் திணறி வந்தது வனத்துறை. இந்த T23 புலி, நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் நான்கு பேரின் உயிர் இழப்பிற்கு காரணமாகவும், 50க்கும் மேற்பட்ட கால்நடைகளை இறப்பிற்கு காரணமாகவும் உள்ளது. T23 புலியை பிடிக்க 2 கும்கி யானைகள், காவல்துறையின் பல மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு முதன்முறையாக T23 புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இருப்பினும் T23 புலி பிடிபடாமல் நேற்று இரவு தப்பியது. இதையடுத்து அந்த T23 புலி நேற்று இரவு சாலையொன்றை கடப்பதை பார்த்த வனத்துறையினர், அதை பின்தொடர்ந்து 2வது மயக்க ஊசியை செலுத்தினர். இந்தநிலையில், இன்று T23 புலி தற்போது பிடிப்பட்டுள்ளது.
T23 புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிப்பதற்காக கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் பணிகள் துவங்கப்பட்டது. அப்போது T23 புலி தேவன் எஸ்டேட் மற்றும் மேல்பீல்டு பகுதிகளில் பதுங்கி இருந்தது. T23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக கோவையில் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து இரு வனகால்நடை மருத்துவர்கள் மற்றும் முதுமலையில் பணியாற்றக்கூடிய வன கால்நடை மருத்துவர் என 3 பேர் கொண்ட குழு முதற்கட்டமாக ஈடுபட்டது.
தமிழக வனத்துறையோடு கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு வனத்துறை குழுவினரும் T23 புலியை உயிருடன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டது. T23 புலி பதுங்கி இருந்த பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும், மரம் வெட்டும் இயந்திரத்தைக் கொண்டும் சத்தம் எழுப்பி T23 புலியை வெளியே கொண்டுவர முயற்சி செய்தனர். மேல்பீல்டு பகுதியில் வைத்து தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் T23 புலி புதரை விட்டு வெளியே வந்தும் அதை பிடிக்க வனத் துறை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து, மயக்க ஊசி செலுத்தி T23 புலியை பிடிப்பதற்காக கூடுதலாக இரண்டு வன கால்நடை மருத்துவர்கள் ஓசூர் மற்றும் தேனியிலிருந்து வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்தும் T23 புலியை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தற்போது வரை தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.
இந்தநிலையில், T23 புலியை சுட்டுப் பிடிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, பின் சுட்டுப்பிடிக்க வேண்டாமென சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தொடர் போராட்டத்துக்குப் பின் தற்போது T23 புலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தலைமை வன உயிரின காப்பாளர் நீரஜ் T23 புலியை பிடிக்கும் முன்பே செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். T23 புலி பிடிக்கப்பட்ட பிறகு அதனை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்விக்கு, T23 புலி உயிருடன் பிடிக்கப்பட்ட பிறகு அதன் அடுத்த கட்டம் குறித்து கால்நடை மருத்துவர்கள் தான் முடிவு செய்வார்கள் என கூறினார். இதையடுத்து, தற்போது T23 புலி கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு அனுப்பப்படும் என தெரிகிறது.