பொள்ளாச்சி செப்..19.,
குடிசை மாற்று வாரிய சார்பில் கட்டப்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் திமுகவினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கிட்டசூராம்பாளையத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில், 4 ஏக்கர் பரப்பளவில் சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பில் 512 குடியிருப்புகளுடன் கூடிய அடுக்குமாடி கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் மாணிக்கராஜ், திமுக நகர தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் விவேக் ஆகியோர் விண்ணப்பங்களுடன் பொள்ளாச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்தனர். இந்தநிலையில், நந்தனார் காலனியில் வீடுகள் ஒதுக்குவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இந்த மோதலை அடுத்து, வருவாய் துறை அதிகாரிகளும் போலீசாரும் திமுக நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இச்சம்பவம் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை மோதலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, திமுகவினர் மோதலை தொடர்ந்து பொள்ளாச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

