தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த பிறகு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டது.
வணிக வளாகங்கள், கோவில்கள், சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள் என ஒவ்வொன்றாக தளர்வுகள் மூலமாக திறக்கப்பட்டது. தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே தொடர்ந்து அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கியதால் கடந்த முறை புதிதாக தளர்வுகளின்றி ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கை நீடித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சென்னை, கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனாலும் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் பாதிப்பு சற்று அதிகரித்தே இருந்தது.
இந்த நிலையில், அடுத்த வாரம் கூடுதல் தளர்வுகளை வழங்கலாமா அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கூட்டத்தில் தலைமைச் செயளாலர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறதா? அல்லது கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுகிறதா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.



