டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறி காதல் திரைப்பட புகழ் நடிகர் சுகுமார் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
பிரமாண்ட இயக்குனர் சங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல், திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல திரைப்படங்களில் துணை நடிகராக பணியாற்றிவர் சுகுமார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு படமெடுக்கப்பட்டு மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள்.
இந்தநிலையில், சமூக வலைதளங்களில் ரவுடிபேபி சூர்யா, இலக்கியா, ஜிபி.முத்து உளிட்ட இன்னும் பல நபர்கள் ஆபாசமாக பேசியும், ஆபாசங்கள் நிறைந்த வீடியோகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதனை தடுத்து நிறுத்த வேண்டி எனது நண்பர் சமீபத்தில் சர்வதேச மனித உரிமைகள் கவுன்சிலின் மாநில பொதுசெயலாளர் ஏழுமலை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இதையடுத்து, ஊடகங்கள் வாயிலாக நானும் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்தேன். இதைத்தொடர்ந்து, நெல்லை சங்கர், சேலம் மணி என்பவர்களும் டிக்டாக் பிரபலம் ஜிபி.முத்துவும் தொடர்ந்து சமூக வலைதளம் வாயிலாக எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அவர்கள் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆபாசங்கள் நிறைந்த இவர்களின் சமூக வலைதள பக்கத்தை தடை செய்ய வேண்டும் என்றும் காதல் திரைப்பட துணை நடிகர் சுகுமார் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.



