சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த இளம் பெண் லட்சுமி பிரியா. இவர் நேற்று இரவு குடிபோதையில் தனது காதலர் மற்றும் தோழி அவரது ஆண் நண்பருடன் தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்திருக்கிறார்.
இதை பார்த்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி புருஷோத்தமன், இளம் பெண் லட்சுமி பிரியாவிடம் சென்று குடியிருப்பு பகுதிக்குள் இதுபோல் வருவது தவறு. இளம் வயதில் இருக்கும் நீங்கள், அறியாமல் இப்படி செய்கின்றீர்கள். உங்களது பெற்றோர்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவார்கள். உங்கள் பெற்றோர்கள் எவ்வளவு சிரமப்பட்டு உங்களை வளர்த்து படிக்க வைத்து இருக்கிறார்கள். நீங்கள் இப்படி செய்யலாமா, உங்கள் வாழ்க்கையை நீங்களே அழிக்கலாமா என்று அறிவுரை கூறியிருக்கிறார்.
குடிபோதையில் இருந்த நாலு பேருக்கும், புருஷோத்தமனின் அறிவுரைகள் எரிச்சலை தந்து இருக்கிறது. வீட்டிற்குள் சென்று உல்லாசமாக இருக்கலாம் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்து, புருஷோத்தமன் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்ததால் ஆத்திரத்தில் அருகில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து புருஷோத்தமன் தலையிலும் முகத்திலும் பலமாக அடித்து இருக்கிறார்கள்.
இதனால் பலத்த காயமடைந்த புருசோத்தமன் மயங்கி விழுந்திருக்கிறார். அதன்பிறகு 4 பேரும் வீட்டிற்குள் சென்றுவிட்டனர். தட்டுத்தடுமாறி எழுந்த புருஷோத்தமன் காவல்துறையிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண் லட்சுமி பிரியாவின் வீட்டிற்கு வந்தபோது, லட்சுமி பிரியாவும் காதலர் விக்னேசும் மட்டுமே சிக்கியிருக்கின்றனர். இவர்கள் கூட இருந்த மற்ற 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.


