கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் அதிமுகவின் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா என்பவர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.
தமிழ்நாட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அம்மையாரின் மர்ம மரணத்திற்கு நல்ல தீர்ப்பு வழங்கிடு என்ற தலைப்பில் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.
தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய கூடா நட்பு கேடாய் முடியும் என்ற வாக்கிற்கிணங்க இந்த சம்பவம் நடந்து உள்ளது என்று அந்த போஸ்டரில் அச்சிடப்பட்டிருந்தது. 
தமிழக முன்னாள் முதல்வரும் 09 கோடி மக்களின் இதயங்களில் வாழும் மறைந்த ஜெயலலிதா அம்மையாரின் மர்ம மரணத்திற்கு நல்ல தீர்ப்பு வழங்கிடு.
ஜெயலலிதா அம்மையாரின் வேதா இல்லத்தில் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி நடந்தது என்ன? எதற்காக அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முதல்வருக்கு என்று இருக்கும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்சில் வைத்துக் கொண்டு சென்றது ஏன்?
ஜெயலலிதா அம்மையாரின் வீட்டில் இருந்த அவரது பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர், உயரதிகாரிகள் அப்போது எங்கே போனார்கள்? ஜெயலலிதா அம்மையாரின் வீடு மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் ஏன் செயல்படவில்லை? அதை செயல்படாமல் செய்தவர்கள் யார்? ஜெயலலிதா அம்மையாரின் பூத உடலை, அவருடைய குல வழக்கப்படி இறுதி மரியாதை செய்யாமல், அவசர அவசரமாக அடக்கம் செய்வது ஏன்? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் ஒரு காலை வெட்டி எடுத்து அவருடைய பாதத்தை வைத்து ரகசிய அறை திறக்கப்பட்டதாக பரவலாக சொல்லப்படுகிறதே… அது உண்மையா? என்று அந்த போஸ்டரில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார் ராஜா.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து தீர்ப்பினை வழங்க வேண்டும். காலம் கடந்த நீதி என்பது அநீதிக்கு சமம் என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.