திமுக எம்.பி ஆ.ராசா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக புகாரில் 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக எம்.பி ஆ.ராசா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவரின் தாயார் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.
திமுக எம்.பி ஆ.ராசா பேசும்போது, ஜனநாயகத்தை காப்பாற்ற சிறைக்கு சென்றவர் மு.க.ஸ்டாலின். அவர் படிப்படியாக உயர்ந்து திமுகவின் தலைவர் ஆகியுள்ளார் .நல்ல உறவில் சுகப் பிரசவத்தில் பிறந்தவர் மு.க.ஸ்டாலின். கள்ள உறவில் குறைபிரசவத்தில் பிறந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இதில், சுகப்பிரசவ குழந்தைக்கு தாய்ப்பாலே போதும்; குறைபிரசவ குழந்தையை காப்பாற்ற டெல்லியிலிருந்து மோடி எனும் டாக்டர் வருகிறார் என்றார். எம்.பி ஆ.ராசாவின் பேச்சுக்கு பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி உள்ளிட்டோரும் கண்டன குரலை பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, ஆ.ராசா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார். இதனிடையே எம்.பி ஆ.ராசா மீது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எம்.பி ஆ.ராசா தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
எம்.பி ஆ.ராசா பேச்சு தேர்தல் ஆணையம் வரை செல்ல நேற்று மாலை 6 மணிக்குள் விளக்கம் அளிக்க ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி தேர்தல் ஆணையத்திற்கு பேக்ஸ் மூலம் விளக்கமளித்த எம்.பி ஆ.ராசா, பெண்களின் கண்ணியத்திற்கு குறைவாகவும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியும் நான் பேசவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி நான் பேசியதை அதிமுக, பாஜகவினர் திரித்து பரப்புகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்த விவகாரத்தில் திட்டமிட்டு என் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் 2 நாட்கள் பரப்புரை மேற்கொள்ள எம்.பி ஆ.ராசாவிற்கு தேர்தல் ஆணையம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி விமர்சித்தது குறித்து விளக்கமளித்தது திருப்தி அளிக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து எம்.பி ஆ.ராசாவின் பெயரை நீக்கியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் விதிகளை மீறி பேசியது கண்டிக்கத்தக்கது என்றும், இனி பேசும்போது எச்சரிக்கையுடன் பேசவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


