தமிழ்நாட்டு அரசியலில் அதிமுகவுக்கு இனிமேல் இறங்குமுகம்தான் என்றும் எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தோல்வியடைவார் என்றும் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு தொகுதிப்பங்கீடு குறித்த, பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தநிலையில், இன்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக்கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், 9-3-2021 இன்றுமுதல் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ், அதிமுக கூட்டணியில் நாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததாலும், அவர்கள் கொடுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை காரணமாகவும், தமிழகம் முழுக்க இருக்கும் தொண்டர்களின் எண்ணங்களை, மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்திடம் தெரிவித்ததால் கூட்டணியிலிருந்து விலகுகிறோம்.
இன்று தேமுதிகவினருக்கு தீபாவளி. போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும். அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரக இருக்கும் கே.பி.முனுசாமி, பாமகவின் ஸ்லீப்பர் செல்லாகவும், கொள்கைப் பரப்பு செயலாளராகவும் செயல்படுகிறார் என்று கூறினார். இதையடுத்து, தேமுதிகவின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் விரைந்து சென்றார் சுதீஷ்.
இந்தநிலையில், இன்று பண்ருட்டியில் நடைபெற்ற தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜயபிரபாகரன், தேமுதிக யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தலையே போனாலும் தன்மானத்தை இழக்கமாட்டோம். எனக்கு தன்னம்பிக்கை அதிகம். என் அப்பாவை சிம்மாசனத்தில் அமரவைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் யாருக்கும் பயப்படமாட்டேன். தேமுதிகவிற்கான நேரம் வந்துவிட்டது.
மேலும், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய சட்டமன்ற தொகுதியில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் போட்டியிட வேண்டும். இனி நாம் சாணக்கியனாக இருந்தது போதும், இனிமேல் தேமுதிக சத்ரியனாக இருக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.
இலவசம் என்றுகூறி மக்களை சோம்பேறி ஆக்கிவிட்டனர். தமிழக அரசியலில் அதிமுகவுக்கு இனிமேல் இறங்குமுகம்தான். எடப்பாடி தொகுதியில், முதல்வார் பழனிச்சாமி தோல்வியடைவார். என்று ஆவேசமாக பேசினார்.


