தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கிய அரசியல் களம் தற்போது அனல் பறந்து தொடங்கியது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக திடீர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவுக்கு, பாஜகவை விட குறைவான தொகுதிகளை கொடுக்க அதிமுக தலைமை முன்வந்தது. இதுவே தேமுதிகவினரை கொதித்தெழச் செய்தது.
இதையடுத்து, தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து பண்ருட்டியில் பேசிய விஜயபிரபாகரன், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல தேமுதிகவினர். அதிமுகவின் தலைமை சரியில்லை.
எடப்பாடி தொகுதியிலேயே அதிமுக மண்ணைக் கவ்வும். அதிமுகவிற்கு இனிமேல் இறங்கு முகம்தான் என கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தநிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய சிறிது நேரத்திலேயே, விஜயபிரபாகரன் இவ்வாறு பேசியது, அதிமுக தொண்டர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.
இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் இருந்து தேமுதிக விலகியது அதிமுகவுக்கு பாதிப்பில்லை. பாதிப்புக்கு தேமுதிகவுக்கு தான். தேமுதிக எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது. வார்த்தைகளை அளந்து பேசுங்கள். இல்லையென்றால் அதற்குரிய பதிலடியை அதிமுக கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, அதிமுகவை பிடிக்கவில்லை என்பதற்காக சேற்றை வாரி இறைப்பதா ? என்று கேள்வி எழுப்பினார் அமைச்சர் ஜெயக்குமார். மேலும், இதேபோல் தேமுதிக கீழ்த்தரமான அரசியலை முன்னெடுத்தால், அதற்குண்டான பதிலடி அதிமுக கொடுக்கும் என்று கூறினார். மேலும், எடப்பாடி மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் ஆவேசமாக பேசினார்.




