தீய சக்தியாக இருக்கும் திமுகவையும் அதன் கூட்டணியையும், துரோக சக்தியான அதிமுகவையும் அதன் கூட்டணியையும் தேர்தலில் வீழ்த்த, தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தோம்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமமுக-தேமுதிகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கடந்த சில நாள்களுக்கு முன்பு கையெழுத்தானது. அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக அலுவலகத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்றார்.
விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர் டிடிவி தினகரனை வரவேற்றனர். கூட்டணி கட்சி தலைவர்களும் டிடிவி தினகரனுடன் சென்றிந்தார். சிறப்பாக சந்திப்பு நடந்தது.
இதையடுத்து, டிடிவி.தினகரன், சுதீஷ், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தமிழ்நாட்டில் வெளிப்படையான ஊழலற்ற ஆட்சியை அமைப்பதற்காகவே உருவானதுதான் இந்த கூட்டணி. சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குதான் இருக்கிறது. தேமுதிகவை கூட்டணிக்கு வருமாறு அமமுக அழைத்ததில் என்ன தவறு உள்ளது.
தீயசக்தி திமுகவையும் அதன் கூட்டணியையும், துரோக சக்தியான அதிமுகவையும் அதன் கூட்டணியையும் இந்த தேர்தலில் வீழ்த்த தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தோம். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றக்கூடிய, வெற்று வாக்குறுதிகளைதான் திமுக, அதிமுக அறிவித்திருப்பது என்பது மக்களுக்கே நன்றாக தெரியும். வெற்றி நடைபோடுகிறது என்று நீங்கள் வேண்டுமானால் கூறலாம், ஆனால் மக்கள் காதில் என்ன பூவா இருக்கிறது.
தேமுதிகவிற்குதொகுதி ஒதுக்கியதால் அமமுக நிர்வாகிகள் தாமாக முன்வந்து வேட்பாளர்களை திரும்ப பெற்றனர். தமிழகம் முழுவதும் அமமுக கட்சிக்கு கட்டமைப்பில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் தேமுதிக, அமமுக கூட்டணியிலான இரு தலைமையினால் உருவாக்கப்பட்டது என்று சொல்வதை விட, தொண்டர்களால் உருவான கூட்டணி என்றுதான் சொல்ல வேண்டும்.
அமமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்பதுதான் இலக்கு. தொங்கு சட்டமன்றம், ஊஞ்சல் சட்டமன்றம் குறித்து யோசிக்கின்ற அளவிற்கெல்லாம், எனக்கு பெரிய அரசியல் ஞானம் கிடையாது. வெற்றி ஒன்றுதான் எங்கள் இலக்கு, வெற்றியை நோக்கி பயணிக்கிறோம் என்றார்.






