மண்ணிலிருந்து விண்ணுக்கு பாலம் கட்டுவதுபோல் பொய்யான தேர்தல் அறிக்கை மட்டுமே திமுகவில் இடம் பெற்றுள்ளது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் விமர்சனம் செய்துள்ளார்.
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக மீண்டும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் போட்டியிடுகிறார். நேற்று பொள்ளாச்சி-கோவை சாலையில் அக்கட்சியின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. திறப்பு விழாவில், அதிமுகவின் ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, வரும் சட்டமன்றத் தேர்தல், பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவதற்காக, தொண்டர்கள் பாடுபடவேண்டும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கேட்டுக்கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்ததாவது :- மக்களுக்கு நிறைவேற்றக்கூடிய திட்டங்கள் மட்டுமே அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். திமுக தேர்தல் அறிக்கை என்பது மண்ணிலிருந்து விண்ணுக்கு பாலம் கட்டுவதுபோல் வானளாவிய பொய் மூட்டைகளை அவிழ்த்து திமுக தேர்தல் அறிக்கையில் விடுவார்கள்.
அவர்கள் எதையும் நிறைவேற்ற மாட்டார்கள். நிறைவேற்றப்படுகிற வாக்குறுதிகளை மட்டுமே, தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்து, நிறைவேற்றும் கட்சி அதிமுகதான். 2006ஆம் ஆண்டு முதல், திமுக கொடுத்த தேர்தல் அறிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை.
மேலும் அவர் கூறுகையில், இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார்கள். கையளவு கடுகளவும் தரவில்லை. வாய் வார்த்தைகளால் முடித்துவிட்டார்கள். அதைப்போல்தான் நாடாளுமன்ற தேர்தலிலும், கொடுத்த வாக்குறுதிகளை எதையுமே திமுக நிறைவேற்றவில்லை. சொல்வதை எதையும் திமுக செய்வது இல்லை.
தற்போது, அறிவித்துள்ள முதலமைச்சர் விவசாயக் பயிர்கடன், நகை கடன், சுய உதவி குழு கடன் தள்ளுபடி போன்ற அறிக்கைகள் மத்தியில் திமுகவின் தேர்தல் அறிக்கைகள் எடுபடாது, என்று தெரிவித்தார்.




