தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் அதிரடியாக களமிறங்கியிருக்கும் அதிமுக, தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொகுதி பங்கீட்டில் படுபிஸியாக இருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டணி கட்சிகளிடம் அதிமுக கறார் காட்டியது. இந்தநிலையில், திமுகவிற்கு சரிசமமான இடங்களில் அதிமுகவும் போட்டியிட வேண்டுமென்று, அதிமுக பிடிவாதமாக இருந்ததால்தான், தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டது.
அதிமுக கூட்டணியில் அதிக பட்சமாக பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பாஜகவுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில், கூட்டணி கட்சிகளுக்கான வாக்கு வங்கி, தொகுதி நிலவரம் உள்ளிட்ட பலவேறு விவரங்களை ஆராய்ந்த பிறகே இத்தனை தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருக்கிறது. தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் கொடுக்க அதிமுக முன்வந்த நிலையில், அதை ஏற்காத மறுத்து தேமுதிக கூட்டணியை முறித்துக் கொண்டது.
இதையடுத்து, நேற்று மாலை திடீர் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் தேமுதிக விலகல், பாஜக மற்றும் பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தேமுதிகவிற்கு கொடுக்க நினைத்த 13 இடங்களையும் யாருக்கு கொடுப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைதான், விடிய விடிய இன்று அதிகாலை 3 மணி வரை நடந்ததாம்.
விடியவிடிய நடந்த கூட்ட முடிவில் பாமக, பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகளை வழங்குவது என்றும் அதிமுக முடிவு செய்து விட்டதாம். இன்றே அதன் விவரங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கூட்டணியில், தொகுதி பங்கீடு முடிந்தவுடன், தனது ஆட்டத்தை ஆரம்பித்த பாஜகவுக்கு செக் வைக்கும் விதமாக அதிமுக தன் கையை தற்போது உயர்த்தியிருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.


