வீடுகளுக்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்யவதற்கு, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தாக்கல் செய்யப்பட்ட அந்தமனுவில், சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக கேஸ் ஏஜென்சிகளுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படுகின்றன. சிலிண்டர்கள் டெலிவரி செய்யவதற்கு, டெலிவரி செய்யும் நபர்களுக்கு கட்டணம் வழங்காமல், ஏஜென்சிகளே எடுத்துக் கொள்கின்றன.
மேலும், வீடுகளுக்கு சிலிண்டர்கள் டெலிவரி செய்வதற்காக நுகர்வோர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும்படி, டெலிவரி செய்யும் நபர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதனால், பொதுமக்களின் பணம் 500 கோடி ரூபாய்க்கு மேல் சுரண்டப்படுகிறது. இதைத் தவிர்க்க டெலிவரி செய்யும் நபர்களுக்கு சீருடை, அடையாள அட்டைகள் வழங்கி அவர்களின் பணியை வரைமுறை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தவழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலிண்டர் சப்ளை செய்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து புகாரளிக்க வசதி உள்ளதாகவும், அந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேல்குறிப்பிட தகவலை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும், இதுசம்பந்தமாக விதிகள் வகுத்து உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.


