திண்டுக்கல் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் 3 மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இருந்தாலும், ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டன. இந்தநிலையில், கொரோனா பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு எடுத்தது.
இதன்படி, பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்ட நிலையில் , 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்ததால், பொதுத்தேர்வு வருவதையடுத்து தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்தநிலையில், சென்னை, திண்டுக்கல், சேலம், பழனி உள்ளிட்ட இடங்களில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, திண்டுக்கலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்துவரும் 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 3 மாணவர்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


