கர்நாடகவிலிருந்து நேற்று சென்னை புறப்பட்ட சசிகலாவுக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
நேற்று காலை 7:45 மணிக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்ட சசிகலாவுக்கு அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதாவது, 230 கிலோ மீட்டர் பயணத்தை அவர் 23 மணி நேரமாக மேற்கொண்டார். அந்த அளவுக்கு அவருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை 3 மணி அளவில் பூவிருந்தவல்லி நசரத்பேட்டை பகுதிக்கு வந்தடைந்தார் சசிகலா.
அங்கு அவருக்கு முன்னாள் எம்எல்ஏக்கள் பொன்ராஜ் , ஏழுமலை உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் சசிகலாவிற்கு வெள்ளியால் ஆன விநாயகர் சிலை மற்றும் ரூபாய் நோட்டு மாலைகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, ராமாபுரம் வந்தடைந்த சசிகலா அங்குள்ள எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டிற்கு சென்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தி.நகரில் உள்ள தனது அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டிற்கு சசிகலா வந்தடைந்தார்.
முன்னதாக ராமாபுரம் இல்லத்தில் பேனர், கொடி கம்பம் வைக்க தடை விதிக்க வேண்டும் என எம்ஜிஆர் வளர்ப்பு மகள்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.



