தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அரசியல் களத்தில் பல திடீர் திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அதிமுகவுக்கு தான் கடும் நெருக்கடி நிலவுவதாக தெரிகிறது.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த ஜன.27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்படுவதற்கு முன்னரே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சசிகலாவை தமிழகத்திற்கு வர விடாமல் தடுக்க, அதிமுக செய்த சதி இதுவென அமமுகவினர் குற்றஞ்சாட்டினர். அரசியல் விமர்சகர்களும் இதையே தான் கூறினர். இத்தகைய சூழலில் தான், மாஸ் என்ட்ரி கொடுத்தார் சசிகலா. 6 மணி நேரத்தில் கடக்கக் கூடிய தூரம், தொண்டர்களின் அலைக்கடலால் 23 மணி நேரம் ஆகிப்போனது. அவருக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு இரட்டைத் தலைமையை ஆட்டம் காணச் செய்தது என்றே சொல்ல வேண்டும்.
அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என முட்டுக்கட்டை போட்டும், அதையெல்லாம் தகர்த்தெறிந்து அதிமுக கொடியுடனே சென்னை வந்து மாஸ் காட்டினார் சசிகலா. இதைத் தடுக்க முடியாமல் அதிமுக தலைமை திண்டாடியது. ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடம் இருந்து அதிமுகவை மீட்பது தான் எங்களின் லட்சியம் என சொல்லாமல் சொல்லிவிட்டார் சசிகலா. சென்னை வந்த பிறகு அரசியலில் களமிறங்காமல் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு அதிமுகவை மீட்போம் என டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுக பாஜக கூட்டணி குறித்து இதுவரை யாரும் பேசவில்லை என்றும் சுதாகரனுக்கு அபராத தொகையை செலுத்த பணமில்லை என்றும் தெரிவித்தார்.


