கோவையில் தடுப்பூசி போட்ட 2 குழந்தைகள் உயிரிழந்ததாக வெளியாகும் செய்தி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியிருக்கிறது.
கோவையை அடுத்த மசக்காளி பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் மற்றும் விஜயலட்சுமி தம்பதியின் 3 மாத ஆண் குழந்தைக்கு தடுப்பூசி போட்டபட்டது. தடுப்பூசி போட்ட மறுநாளே உயிரிழந்தது. அந்த தடுப்பூசி போட்ட குழந்தைக்கு இரண்டு நாட்களாகவே தொடர்ந்து காய்ச்சல் இருந்ததாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாகவும் தடுப்பூசியால் தான் குழந்தை உயிரிழந்து விட்டதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
இதற்கு சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்தது. மேலும், தடுப்பூசி போடப்பட்ட பிற குழந்தைகள் நலமாக இருக்கிறது என்றும் நிமோனியா காய்ச்சலால் 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்து விட்டது என்றும் விளக்கம் அளித்தது. இதற்கிடையில், சவுரி பாளையம் பகுதியை சேர்ந்த 2½ வயது குழந்தை ஒன்று தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழந்து விட்டதாக புகார் எழுந்தது. இதனால், தடுப்பூசி போட்டுக் கொண்டதால் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததாக புகார்கள் எழுந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், இந்த தகவலை அறிந்த சுகாதாரத்துறையினர் மொத்தமாக தடுப்பூசி போடப்பட்ட 30 குழந்தைகளின் விவரங்களை சேகரித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குழந்தைகள் அனைத்தும் தற்போது நலமாக இருப்பதாக தெரிகிறது.
2 குழந்தைகள் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியானதால், தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை தொடருவதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


