தற்போதைய நிலையில், 6,7,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் சூழலில், கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பெற்றோரின் அனுமதிக் கடிதத்துடன் பள்ளிக்கு வர அரசு அனுமதி அளித்ததன் பேரில், கடந்த 8ஆம் தேதியில் இருந்து 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்திருப்பதால் பிற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக முழு ஆண்டு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


