பொள்ளாச்சி, பிப்.11
மாசாணியம்மன் கோயில் குண்டம்விழா கொடியேற்றம் நடைபெற்றது.
கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. மாசாணியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்துசெல்வார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் குண்டம் விழா விமர்சையாக நடைபெறும். தை அமாவாசையில் கொடியேற்றத்துடன் துவங்கும். இந்த ஆண்டு வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் குண்டம் விழா தொடஙகியது.
இதற்காக செவ்வாயக்கிழமையன்று சேத்துமடை பகுதியில் இருந்து 80 அடி உயரமுள்ள மூங்கில் கொடிமரத்தை வெட்டி எடுத்து வரப்பட்டது.கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கொடிமரத்தை வியாழக்கிழமை காலை பக்தர்கள் மாலை அணிவித்து சந்தனம், திருநீறு, திலகமிட்டு அம்மனின் கொடி கட்டப்பட்டு ஆனைமலையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ராஜகோபுரம் முன்பு நிலைநிறுத்தப்பட்டது.கொடியேற்ற நிகழ்வின்போது பக்தர்கள் மாசாணி தாயே என்று கோஷமிட்டு வழிபட்டனர்.
தொடர்ந்து 24ம் புதன்கிழமை நள்ளிரவு மயானபூஜையும், 25ம் தேதி சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை நடைபெறவுள்ளது. 26ம் தேதி இரவு குண்டம் பூ வளர்த்தலும், 27ம் தேதி காலை 8.30 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெறவுள்ளது. 28ம் தேதி கொடி இறக்குதல், மார்ச் 1ம் தேதி அபிஷேக பூஜையுடன் குண்டம் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்காக ஏற்பாடுகளை கோயில்நிர்வாகத்தினர், கோயில் முறைதாரர்கள், விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.


