கடந்த நாளுமன்றத் தேர்தலின் போது வீட்டிற்கு ரூ.6,000 வழங்குவதாகக் கூறி காணாமல் போனவர்தான் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்தார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புலியகுளம் பகுதியில் மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.72.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்த பகுதியில பல ஆண்டுகளாக நிலவி வந்த பட்டா பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.69 கோடி மதிப்பில் 561 பேருக்கு பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், தாலிக்கு தங்கம், சுயநிதி கடன், ரேதன் கார்டுகள், அம்மா இரு சக்கர வாகனம் என ரூ.71 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மக்களுக்குதான் அதிக நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறோம் என்று கூறினார்.
தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகையை உயர்த்தி விவசாயக் கடன்களை ரத்து செய்திருக்கிறார் முதல்வர். கொரோனா காலகட்டத்திலும் களத்தில் இறங்கி கட்டுப்படுத்தினார். மு.க ஸ்டாலின் போல மேக் அப் செய்து கொண்டு ஒரே அறையில் இருக்கவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுக்கு ரூ.6,000 வழங்குவதாகக் கூறி ஜெயித்தவுடன் மக்களுக்கு ஏதும் செய்யாமல் மாயமானவர் மு.க ஸ்டாலின் என்று கூறினார்.
மேலும் மக்களுக்கு எதுவுமே செய்யாத ஸ்டாலின் தற்போது குறைகளை நிறைவேற்றுவதாகக் கூறி மனுக்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் என விமர்சித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதால் மக்களை தைரியமாக சந்திப்போம் என்றார்.


