சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக முதல்வராக 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஒரு பிரளயமே வெடித்தது. முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த நிலையில் அவரை மிரட்டி பதவி விலக செய்ததாக சசிகலா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
சொத்துக்குவிப்பு வழக்கு ஒருபுறம், முதல்வர் பதவி மறுபுறம் என வேகம் காட்டி வந்த சசிகலா முதல்வராக பதவியேற்க இருந்த ஒரு சில தினங்களில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது.இதனால், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்துவிட்டு சசிகலா சிறைக்கு சென்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரானார். அன்று முதல் இன்று வரை கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தின் முதல்வராக செயல்பட்டு வருகிறார் பழனிச்சாமி.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பலரும் நினைத்த நிலையில் அதை வெற்றிகரமாக 5 ஆண்டுகள் கொண்டுசென்றுள்ளார்.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று இதுவரையில் 20 ஆயிரத்து 500 கோப்புக்களில் கையெழுத்திட்டுள்ளாராம். இது தமிழக அரசியல் வரலாற்றில் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.





