பொள்ளாச்சி, பிப்.5
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம்விழா வரும் 11ம் தேதி காெடியேற்றத்துடன் துவங்கவுள்ளது.
கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. மாசாணியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்துசெல்வார்கள்.
வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் குண்டம் விழா விமர்சையாக நடைபெறும். தை அமாவாசையில் கொடியேற்றத்துடன் துவங்கும்.
இந்த ஆண்டு வரும் 11ம் தேதி தை அமாவாசையில் குண்டம் விழா துவங்கவுள்ளது. தொடர்ந்து 24ம் புதன்கிழமை நள்ளிரவு மயானபூஜையும், 25ம் தேதி சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை நடைபெறவுள்ளது. 26ம் தேதி இரவு குண்டம் பூ வளர்த்தலும், 27ம் தேதி காலை 8.30 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெறவுள்ளது. 28ம் தேதி கொடி இறக்குதல், மார்ச் 1ம் தேதி அபிஷேக பூஜையுடன் குண்டம் விழா நிறைவுபெறுகிறது.
விழாவிற்காக ஏற்பாடுகளை கோயில்நிர்வாகத்தினர், கோயில் முறைதாரர்கள், விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.


