பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட வேண்டுமென்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வருவாய் கோட்டம், கடந்த 1857-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் சார்-ஆட்சியர் அலுவலகம் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது.
ஆரம்பத்தில் திருப்பூர், உடுமலைப்பேட்டை, வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய பொள்ளாச்சி வருவாய் கோட்டமாக செயல்பட்டு வந்தது. கடந்த 1983-ஆம் ஆண்டு மே மாதம் பொள்ளாச்சி கோட்டத்தில் இருந்து திருப்பூர் தனி வருவாய் கோட்டமாக பிரிக்கப்பட்டது.
உள்ளாட்சி வருவாய் கோட்டத்தை தனி மாவட்டமாக உருவாக்கப்பட வேண்டுமென்று பொதுமக்களின் கோரிக்கை 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. பொள்ளாச்சி கோட்டத்திலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்ட திருப்பூர்,, கடந்த 2008-ஆம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், பொள்ளாச்சி கோட்டம் தற்போது வரை தனி மாவட்டமாக பிரிக்கப்படவில்லை. திருப்பூர் தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதற்கு போதிய பரப்பளவு, மக்கள் தொகை, தாலுகாக்களில் எண்ணிக்கை போன்றவை போதுமானதாக இல்லாமல் இருந்ததால், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்த உடுமலைப்பேட்டை புதிய கோட்டமாக உருவாக்கப்பட்டு திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது தான் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் வட்டங்கள் ஆகும் .
தற்போது பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை ஆகிய 4 வருவாய் வட்டங்கள் உள்ளன. பொள்ளாச்சி கோட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்கள், 118 ஊராட்சிகள், இரு நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் உள்ளன. பாராளுமன்ற தொகுதி பொள்ளாச்சி என்ற பெயரில் ஆறு சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கி இருக்கிறது.
இந்த நிலைகள் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக பிரிக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை வலுத்து வருகிறது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தில், சேக்கல்முடி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட தலைமை இடமான கோயம்புத்தூர் செல்ல வேண்டுமானால் 125 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியிருக்கிறது. வால்பாறை போன்ற மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கோயமுத்தூர் செல்ல சுமார் 5 மணி நேரம் ஆகிறது.
தங்களது குறைகளையோ அல்லது கோரிக்கைகளையோ தெரிவிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதையும் செலவிட வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்கினால், வால்பாறை மக்கள் எளிதில் வந்து செல்லமுடியும். இதோடு ஆனைமலை தாலுகாவில் வசிக்கும் மக்களும் கோயம்புத்தூர் சென்று வருவதில் 80 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியுள்ளது. பொள்ளாச்சி தாலுகா மக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல சுமார் 50 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருக்கிறது.
இதேபோன்று, உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட தலைமை இடமான திருப்பூர் செல்ல சுமார் 100 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டியிருக்கிறது. ஆதலால் பொள்ளாச்சி வருவது என்றால் சுமார் 35 கிலோமீட்டர் பயணித்தால் போதுமானது. முன்பே திருப்பூர் மாவட்டமாக அறிவிக்க இருந்தபோது உடுமலைப்பேட்டை வட்டத்தை திருப்பூருடன் இணைக்கும்போது, அப்போது அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் இருக்க விருப்பம் தெரிவித்தனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு பொள்ளாச்சி கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய வட்டங்கள் இருக்கும்.
இந்த ஆறு வருவாய் வட்டங்களையும் இணைத்தால் பரப்பளவில் 2,771 சதுர கிலோமீட்டர் பரப்பும், 12 லட்சத்து 63 ஆயிரம் மக்கள் தொகையுமாக, 219 கிராமங்களிலும் கணக்கில் வரும். ஒரு மாவட்டம் உருவாக்க 2,500 சதுர கிலோமீட்டர் பரப்பும், 10 லட்சம் மக்கள் தொகையும் 200 கிராமங்கள் இருந்தால் போதுமானதாக இருக்கும்.
வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் சேர்ந்த மக்களின் குறைகளை போக்கவும், இந்தப் பகுதிகளில் உள்ள நிர்வாகரீதியான பிரச்சினைகளை சரி செய்யவும் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்கப்பட வேண்டிய அவசியமாக இருக்கிறது.
பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்கப்பட வேண்டும் என்று சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வலியுறுத்தி இருந்தார். அதே போல் பல்வேறு அரசியல் கட்சிகளும் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சி வாழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்று பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் மீண்டும் அதிமுகவின் கோட்டையாகவே திகழும்.