சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுகவுக்கு மிகப்பெரிய ஆபத்து என கூறியுள்ள மு.க.ஸ்டாலின் அவர் வெளியே வந்தவுடனே அதிமுக ஆட்சிக்கு முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் அதிரையில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நூல் விலை உயர்வு, நூல் தட்டுப்பாடு உள்ளிட்ட விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு மறந்து விட்டதாக குற்றம் சாட்டி பேசினார்.
விவசாயிகள் பிரச்சனைகளையும் அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்ற மு.க.ஸ்டாலின், வேளாண் சட்டங்களை பெரும்பான்மையான மாநிலங்கள் எதிர்க்கும்போது, அதிமுக அரசு மட்டும் ஆதரவு அளித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். தொடர்ந்து, பேசிய மு.க.ஸ்டாலின், சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவது அதிமுகவுக்கு மிகப்பெரிய ஆபத்து என்று கூறியுள்ளார்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடனேயே அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்பதால் திமுகவுக்கான வெற்றி இப்போது முடிவாகிவிட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.