மு.க.ஸ்டாலின் நடத்திய திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் அதிமுக பெண் பரபரப்பு ?
மு.க.ஸ்டாலின் திமுக சார்பில் கோயம்புத்தூரில் நேற்று நடத்தப்பட்ட மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பெண், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதால், அந்த தகராறு செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அதிமுக-திமுக இரு கட்சிகளும் போட்டியாகப் போராட்டங்களும் நடத்தினார்கள்.
கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் பகுதியில் ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட கோயம்புத்தூரரில் ஊழல் அதிகமாக இருக்கிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பல்வேறு அமைச்சர்கள் பல்வேறு ஊழல்களை செய்து வருகிறார்கள். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆவணங்களோடு நிரூபிக்க நான் தயாராக உள்ளேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அடுத்த நான்கு மாதங்களில் திமுக ஆட்சி அமைந்ததும் இன்றைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்த ஊழல்களை நிரூபித்து தண்டனை பெற்று தருவோம் என்றார்.
மேலும், திராவிட முன்னேற்றக கழகம் ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மதுக்கரைப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது எழுந்து குறுக்கிட்டுப் பேச முயன்று தகராறு செய்தார்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்த திமுகவினர் அந்தப் பெண்ணுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
உடனடியாக திமுகவினர் அந்தப் பெண்ணை கூட்டத்திலிருந்து வெளியேற்றி, அந்தப் பெண்ணை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவரது பெயர் பூங்கொடி என்றும், அவர் அதிமுகவின் மகளிர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
கூட்டத்தில் என்ன நடந்தது?
திமுக நடத்திய கிராமசபை கூட்டத்தில் முன்வரிசையில், திமுக தொப்பி அணிந்துபடி அமர்ந்திருந்த அந்த பெண், மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது எழுந்துநின்று பேசத் தொடங்கினார்.
எந்த தொகுதியை சேர்ந்தவர் நீங்கள் என மு.க.ஸ்டாலின் அவரிடம் கேட்டார். அதற்கு அந்த பெண் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி என்று பதில் கூறினார். அருகில் உள்ள ஊரில் இருந்து வந்ததாக கூறினார்.
அந்த ஊர் எங்கிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கேட்டபோது, எங்கு இருக்கிறது என்றே தெரியாமல், எதற்காக கிராம சபைக் கூட்டம் நடத்துகிறீர்கள்' என கோபமாக கேட்டார் அந்தப் பெண். இதனால் கூட்டத்தில் சலசலப்பு பரபரப்பும் ஏற்பட்டது. அப்போது, பேசிய மு.க.ஸ்டாலின், ''இவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனுப்பி வைத்த நபர், அவரை காவல்துறையினரிடம் ஒப்படையுங்கள்'' என்று கூறினார். பின்னர் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ''திமுகவின் கூட்டத்தில் தகராறு செய்ய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இப்படி செய்வார் என்று எனக்கு முன்னரே தெரியும். திமுகவினரும் இப்படி இறங்கினால் அதிமுகவின் எந்த கூட்டமும் நடக்காது.'' என்று பேசினார்.
ஆர்ப்பாட்டம் - மறியல்
திமுக கூட்டத்தில் அஇஅதிமுக பெண் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அருகே அஇஅதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், அந்தப் பெண்ணை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக திமுகவினர் கூறுகிறார்கள். அதிமுகவினருக்கு எதிராக திமுகவைச் சேர்ந்தவர்களும் அதே பகுதியில் கண்டன கோசங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.