11-ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை ஜூலை 25:
சென்னை நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கிவைத்தார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-2022-ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
சுமார் 200 அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிதிவண்டியை பெற்றுக்கொண்டனர். இவ்விழாவில் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் ராஜ கண்ணப்பன், அமைச்சர் கயல்விழி மற்றும் பல அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

.jpg)