காட்பாடி அருகே இருளர் சமுதாய பெண்ணை மிரட்டியவர் மீது புகார்
இருளர் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை மிரட்டி, வீட்டை சேதப்படுத்தியவர் மீது பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வேலூர்: காட்பாடி அடுத்த குப்பத்தாமோட்டூர் கிராமத்தில் இருளர் இனத்தை சேர்ந்த இரண்டு குடும்பங்கள் 1994-ஆம் ஆண்டு முதல் அரசு வழங்கிய, பட்டா நிலத்தில் வசித்து வருகின்றனர். இதையடுத்து அரசு வழங்கிய பட்டா நிலத்தில் ஜீவா (52) என்ற பெண் அப்பகுதியில் வீடுகட்டி வாழ்ந்து வருகிறார்.
இவரது வீட்டை அடுத்த வீடுதான் அண்ணாமலை என்பவரது வீடும், நிலமும் உள்ளது. நீண்ட காலமாக இருளர் சமுதாய மக்கள் அங்கு வசிப்பது இவருக்கு தொந்தரவாக இருந்ததால், இருளர் சமுதாய மக்களை, வீட்டை காலி செய்யும்படி பலமுறை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், நவம்பர் 06-ஆம் தேதி காலை 7 மணியளவில் அண்ணாமலையும் , அவரது மகன்கள் வேலுமணி, வெங்கடேசன் ஆகிய மூவரும் சேர்ந்து ஜீவாவின் வீட்டின்முன் இருந்த மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். அந்த பெண்ணையும் தாக்கியுள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார்
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், அண்ணாமலை, அவரது மகன்களிடம் விசாரணை நடத்தி, எச்சரித்துச் சென்றனர்.
இதையடுத்து, மீண்டும் நேற்று நவம்பர் 07ஆம் தேதி காலை அண்ணாமலை மகன் வெங்கடேசன் என்பவர் அத்துமீறி ஜீவாவின் வீட்டினுள் நுழைந்து, கதவை உடைத்து பாத்திரங்களை வெளியே எறிந்தும், வீட்டில் இருத்து சாலைக்கு செல்லக்கூடிய பாதையை வேலி போட்டு மறைத்தும் உள்ளனர். இதுதொடர்பாக திருவலம் காவல் துறையினரிடம் ஜீவா புகார் அளித்தார்.