கோவை அக் 21.,
வழக்கு விசாரணைக்காக, 9 பேரும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிந்த பின், இரு வாகனங்களில், கோவையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு நேற்று மாலை அழைத்து சென்றனர்.
இந்தநிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகிற திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் சென்ற வாகனம், கோவையை அடுத்த நீலாம்பூர் டோல்கேட் அருகில் திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து சாலையோரத்தில், இந்த ஐந்து பேரின் உறவினர்களும் தயாராக நின்றிருந்தனர். வாகனத்தில் இருந்த கைதிகளுடன் உறவினர்கள் சிறிது நேரம் உரையாடி உள்ளனர். அதன்பின்னர், அந்த வாகனம் புறப்பட்டு சென்றது.
இதையடுத்து, கைதிகளுக்கு சேலம் போலீசார் அளித்த இந்த சிறப்பு சலுகை, தற்போது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கைதிகளை பார்க்க வேண்டுமென்றால், சிறையில் முறைப்படி மனு அளித்து பார்க்கலாம். ஆனால், இதுபோன்று ரோட்டில் ஆட்கள் நடமாட்டம் குறைவான பகுதியில், வாகனத்தை நிறுத்தி, உறவினர்களை சேலம் போலீசார் பேச அனுமதித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், விதிமுறைகளை மீறிய, ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ., சுப்ரமணியம், போலீசார் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ் குமார் மற்றும் கார்த்தி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
