தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் அனல் பறக்கும் பிரச்சாரத்தால் தேர்தல் களம் சூடுபிடுத்துள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் நேரடியாக களம் காண்கின்றனர்.
இந்தநிலையில், அதிமுகவிற்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் பெரிய இடியாக இருப்பார் சசிகலா என்று எதிர்பார்த்த நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக சமீபத்தில் அறிவித்தது அதிமுகவினர் இடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது. இதை அக்கட்சியின் மூத்த தலைவரும், துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையடுத்து, கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் முருகனை எதிர்த்து போட்டியிடுகிறார். முருகன் ஏற்கனவே அந்த தொகுதியை தன்வசம் வைத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட திமுக வேட்பாளர் முருகன் கே.பி.முனுசாமி யார், 30 சதவீதம் வாக்குகள் கூட வாங்க முடியவில்லை என்பதை ஜெயலலிதா தெரிந்து கொண்டுதான் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் என்று கூறினார். திமுக வேட்பாளர் முருகன் பேச்சை கேட்டு அதிர்ந்து போன கே.பி.முனுசாமி அவருக்கு பதில் அளித்த விதம், அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, முருகன் வரலாறு தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். பொய் சொல்லி வாக்கு கேட்க கூடாது. தப்பான விசயங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி தன்னை சங்கடப்படுத்துகிறார். வேண்டாம் முருகன் நான் பேச ஆரம்பித்தால், நீங்கள் தாங்க மாட்டீர்கள். நான் நேராக மேடைக்கு வந்து பேசுவேன். அந்த மாதிரி ஆளு நான். நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள்; தவறாக பேசாதீர்கள் என்று கூறியுள்ளார். அத்துடன், சசிகலாவை ஏன் எதிர்க்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? அன்று என்னை எதிர்த்த பொம்பள 'அவ' தான். நான் அமைச்சராக கூடாது என்று அம்மாவிடம் சண்டை போட்டவர்.
என் 30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நான் யாரிடமும் ஒரு பைசாகூட கையேந்தியது இல்லை. சசிகலாவுக்கும் எனக்கும் கடும் போட்டி இருந்தது. அந்த போட்டியில் 'அவ' ஜெயிச்சா, நான் தோற்றேன். ஆனா அம்மா என் பக்கம் இருந்தார். அம்மா என்னை விடவில்லை; எனக்கு சீட்டு கொடுத்தார். என் மீது பாசமாக இருந்தார். 2016-ல் அம்மா எனக்கு வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட சீட்டு கொடுத்தார். ஆனால், நான் வெற்றிபெற்று விடுவேன் என்று நினைத்த சசிகலா, என்னை பென்னாகரம் தொகுதிக்கு மாற்றினார் என்று அதிரடியாக பேசியுள்ளார் கே.பி.முனுசாமி.
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில், அவர் குறித்து கே.பி.முனுசாமி ஒருமையில் பேசியுள்ள இந்த பேச்சுக்கு அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


