பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, பெங்களூருவிலிருந்து அலைகடலென திரண்ட தொண்டர்கள் மத்தியில், தொடந்து 23 மணி நேரம் பயணித்து, சென்னை வந்தடைந்தார்.
அவரது வருகை அதிமுகவினர் வயிற்றில் புளியை கரைக்கச் செய்தது. சிறையில் இருந்து காய் நகர்த்திக் கொண்டிருந்த சசிகலா, சென்னை வந்தபிறகு என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ என்று புழுவாக துடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், எந்தவித பரபரப்பும் இல்லாமல் மௌனம் காத்தார் சசிகலா.
இதையடுத்து, திடீரென அறிக்கை ஒன்று வெளியானது. தான் அரசியலில் இருந்து விலகப் போவதாக அதில் எழுதியிருந்தார். டிடிவி தினகரன் தலையில் இந்த செய்தி பேரிடியாக விழுந்தது. அரசியலில் இருந்து தான் விலகியது மட்டுமில்லாமல், நீயும் விலகு என்று டிடிவி.தினகரனிடம் சசிகலா கூறியதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பின்புலத்திலிருந்து பாஜக அழுத்தம் கொடுத்து காய் நகர்த்துவதாக கூறப்பட்டாலும், புலி பதுங்குவது பாய்வதற்காகத் தான் என்று சசிகலாவுடன் இருக்கும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
இந்தநிலையில், டிடிவி.தினகரன் சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவை சந்தித்திருக்கிறார். சசிகலா அரசியலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், சசிகலாவை மீண்டும் அரசியலுக்கு டிடிவி.தினகரன் அழைக்கிறார் என்று அந்தப்பகுதி விசுவாசிகள் தெரிவிக்கின்றனர்.


