கடலில் குதிப்பது, குஸ்தி எடுப்பது நல்ல தலைவருக்கு அழகு அல்ல என ராகுல்காந்தி குறித்து குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.
திருநெல்வேலியில் பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் மகாராஜன், பாஜக நட்சத்திரப் பேச்சாளரான நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைதொடத்து, பேசிய நடிகை குஷ்பு, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி மாபெரும் வெற்றி பெரும், அந்த நம்பிக்கையில்தான் தேர்தலில் இறங்கியுள்ளோம். நம்பிக்கைதான் வாழ்க்கை. அந்த நம்பிக்கை எங்களுக்கு நிறைய இருக்கிறது.
பாஜக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு கோடி பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு கொடுக்கப்படவுள்ளது. நிதியாண்டின் தொடக்கம் மற்றும் இறுதியில் எரிபொருள் விலை உயர்வது இயல்பு. அதிமுக அரசு மீது ஆதாரபூர்வமாக ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. கடலில் குதிப்பது, குஸ்தி எடுப்பது நல்ல தலைவருக்கு அழகு அல்ல.
பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. பாஜக சீட் கொடுக்கும் இடத்திலோ, வாங்கும் இடத்திலோ இல்லை. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுகிறது.
திருநெல்வேலி தொகுதியில் யார் போட்டியிடுவர் என்பதனை மேலிடம் முடிவு செய்யும். நயினார்நாகேந்திரன் போட்டியிட்டால் எங்களுக்கு சந்தோஷம்தான். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். பெண் ஐபிஎஸ் அதிகாரி மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” எனக் கூறினார்.


