தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா காலகட்டத்தில் இருந்து நெருக்கடியான காலகட்டத்திலும் அதிமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.2,500 வழங்கியது.
அதோடு 5 மாதங்கள் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு கொடுத்திருக்கிறோம். தமிழகத்தில் மட்டும் தான் இது நடந்தது. நெருக்கடியான நேரத்திலும் தேர்தலை பார்க்காமல் மக்களையே பார்த்தது. 55,000 பேருக்கு பட்டா கொடுத்திருக்கிறோம் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, மருத்துவக் காப்பீடு திட்டத்தின் தொகையை 2லட்சத்தில் இருந்து 5லட்சமாக உயர்த்தியிருக்கிறோம். தமிழக அரசு இதுவரை 2000 மினி கிளினிக் கொண்டு வந்து சாதனை படைத்தது.
இன்னும் கூடுதல் சிறப்பாக 1100 புகார் எண்ணில் 60 ஆயிரம் புகார்கள் வந்த நிலையில், 1100 உதவி மையம் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.
மேலும், ஊரடங்கு சமயத்தில், சட்டவிதிகளை மீறியவர்கள், தவறான வதந்தி பரப்பியவர்கள் மீது 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவை அனைத்தும் ரத்து செய்யப்படும்.
வன்முறையில் ஈடுபட்ட வழக்குகள், இ-பாஸ் முறையில் முறைகேடு வழக்குகள், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது தவிர மற்ற அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும்.
அதேபோல சிஏஏவுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர பிறவழக்குகள் ரத்து செய்யப்படும் என்றும் முதல்வர் கூறினார். இந்தநிலையில், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலனை செய்யப்படும் என அறிவித்தார்.


