திமுகவின் எதிரி எப்போதும் அதிமுக மட்டும் தான் என நாமக்கல்லில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக வந்த திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :-
குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் நெசவுத்தொழில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற பல்வேறு பிரச்சினை காரணமாக நலிவடைந்துள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு நெசவு தொழிலை மேம்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாயநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காத நிலையில், அமைச்சர் தங்கமணி தனது உறவினருக்கு புதிதாக சாய சலவை அமைப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளார். சாயசலவை கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதற்கு தீர்வு ஏற்படவில்லை.
காரணமே இன்றி உலக சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வரும் நிலையில், மத்திய அரசு உயர்த்தி கொண்டே வருகிறது. இதனால் சுற்றுலா, லாரி தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. தமிழக நீட் தேர்வு குறித்து நீதிமன்றத்தில் கண்துடைப்பாக மட்டுமே வழக்காடியது அதிமுக. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தளபதி ஸ்டாலின் முழு மூச்சாக செயல்படுவார்.
எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிப்பு வந்தாலும் சந்திக்க தயார். தேர்தலை சந்திக்க 6 மாதத்திற்கு முன்பு இருந்தே தயாராக திமுக உள்ளது. உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையொப்பமிட்டு விவசாயம், நெசவாளர்கள் இலவச மின்சாரத்தை கேள்வி குறியாக மாற்றியது அதிமுக தான். திமுகவின் எதிரி எப்போதும் அதிமுக மட்டும் தான், எனக் கூறினார்.


