2021 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகியுள்ளன.
தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி தீவிரமாக நடத்தி வருகிறார். அதேபோல் ஜனவரி மாதம் எதிர்க்கட்சி தலைவரும் மு.க. ஸ்டாலினும் தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜக–அதிமுகவின் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அதிமுகவை கைப்பற்றுவோம் என அதிரடியாக பேட்டியளித்து வருகிறார். அதேபோல், சசிகலாவும் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்.
இந்தநிலையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில், தேர்தல் பொறுப்பாளர்களிடம் எல்.முருகன் ஆலோசனை நடத்தினார். சட்டமன்ற தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும்? தேர்தலில் எப்படி எதிர்கொள்ள வேண்டும், எந்தெந்த இடங்களில் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து, எல்.முருகன் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து, எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசியபோது, அமமுக தனித்து போட்டியிடுவோம் என எங்குமே சொல்லவில்லை. இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுக இடம்பெறுவது குறித்து தங்கள் கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். திமுகவுடன் அமமுக சேர எந்த அழைப்பும் விடுக்கவில்லை.
புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு நாராயணசாமி தான் காரணம். அதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது. இதில், அதிமுக-சசிகலா இடையிலான விவகாரம் அவர்களது உட்கட்சி பிரச்னை. கொரோனா காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது எனக் கூறினார்.



