தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறர்கள். தேர்தல் அறிக்கைகள் விரைவில் வெளிவரலாம் என்பதனால் கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. அதேநேரத்தில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது.
பிரச்சாரத்தின்போதே முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இலவசமாக மாணவர்களுக்கு இன்டர்நெட் 2 ஜிபி டேட்டா , கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன்கள் ரத்து, அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்து, அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கப்படும் முன் பணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியானது.
இந்நிலையில், அஇஅதிமுக தரப்பில் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிற ஆண்களுக்கு பைக் வாங்குவதற்கு 20% மானியம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக 24 இன்ச் எல்.இ.டி. டிவி அல்லது செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் என்ற அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 6,7,8,9,10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் என அதிமுக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால நிதியுதவி உயர்த்துவது, குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா ஆண்ட்ராய்டு செல்போன், வீடுகளுக்கு 150 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் போன்ற பல்வேறு அதிரடி அறிவிப்புகள் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெறக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், திமுகவும் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் தீவிரமாக கட்டிவருகிறது. ஏற்கனவே, மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தின்போது அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தேர்தல் அறிக்கையிலும் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.



