Type Here to Get Search Results !

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து: 12 பேர் பலியாகி இருக்கும் நிகழ்வு பெரும் வேதனையளிக்கிறது -டிடிவி.தினகரன் #TTV_Dinakaran #AMMK #Fireworks_Factory_Accident

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் பலியாகி இருக்கும் நிகழ்வு பெரும் வேதனையளிக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளத்தில் இயங்கி வந்த மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த 20 பேருக்கு சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டு வெடிகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருப்பதால், தீயணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். விதிகளை மீறி ஆலை இயங்கி இருந்தால் 2025 வரை பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறுகையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் பலியாகி இருக்கும் நிகழ்வு பெரும் வேதனையளிக்கிறது.  உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக்கொள்கிறேன்.


இவ்விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து நலம் பெற பிரார்த்திக்கிறேன். பட்டாசு ஆலை விபத்துகளை நிரந்தரமாக தடுப்பதற்கு, பாதுகாப்பு விதிமுறைகளை அரசு முறையாக கண்காணிக்க வேண்டும். 

இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், உரிய நடவடிக்கை  எடுக்காமல் அரசு எந்திரம் அலட்சியம் காட்டுவதால்தான் இத்தகைய உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இனியும் இது போன்று நடக்காமல் தடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies