Type Here to Get Search Results !

அதிமுக-சசிகலா உறவில் புதியதிருப்பம் உருவாகுமா? எதிர்பார்க்கும் தொண்டர்கள்

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின்  சர்ச்சைக்குரிய பேச்சை கண்டித்து, வி.கே.சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக அழுத்தமாக குரல் கொடுத்து வருவது அரசியல் ரீதியிலும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இதை இன்று, கோகுல இந்திரா  சசிகலாவுக்கு சூட்டிய புகழாரமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.




கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சசிகலா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இந்த கருத்திற்கு எதிராக தனது வன்மையாக கண்டனத்தை தெரிவித்தார். அமமுக சார்பாக பல இடங்களில் உதயநிதி உருவபொம்மை எரிப்பும்  போராட்டங்களும் நடந்தது.



முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், வி.கே.சசிகலாவையும் தவறாக அவதூறாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது.


ஆனால், ஆச்சர்யப்படும் விதமாக இந்த விசயத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன், செய்தி தொடர்பாளர் நாராயணன், குஷ்பு உள்ளிட்ட பல தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டனர். அத்தோடு, சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறான முறையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக, அவரைக் கண்டித்து அதிமுகவினரே பல இடங்களில் அதிகாரபூர்வமற்ற முறையில் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.


சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், “சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான கோகுல இந்திரா கூறியது பரபரப்பை உருவாக்கியுள்ளது


உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான கோகுல இந்திரா, “கட்சியின் தலைவராக இருந்தவர் சசிகலா. அவர் எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றுவோம். அவர் ஜெயலலிதாவுடன் உறுதுணையாக இருந்து, தவ வாழ்க்கை வாழ்ந்தவர். உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முதல்வரோ  துணை முதல்வரோ போராட்டம் நடத்தச் சொல்லவில்லை, என்று தெரிவித்தார்.




அதிமுகவினரின் இந்த திடீர் சசிகலா பாசத்தால், அதிமுக-அமமுக இணைப்புக்கான அச்சாரமா, என்ற கேள்வி எழுந்துள்ளது.


2016லில் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு  ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார், பிறகு அவர் ராஜினாமா செய்துவிட்டு சசிகலா முதல்வராகும் வேலைகள் நடந்தன. அப்பொழுதுதான், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பால், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சசிகலா சிறைக்கு செல்லும் சூழல் உருவானது. அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதல்வராக அறிவித்துவிட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார் சசிகலா.



அதன் பின்னர் ஆர்.கே.நகர் தேர்தல் வழக்கில் டிடிவி.தினகரன் கைது, அதிமுக பிளவு, தினகரன்-சசிகலா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது, ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு என்று கடந்த நான்கு ஆண்டுகளில் அதிமுகவில் அடுக்கடுக்கான பரபரப்புகள் நடந்தன. டிடிவி.தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியையும் உருவாக்கினார். இந்தநிலையில், வரும் ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலையாக உள்ளார் என்ற செய்திதான் இப்போதைய அரசியல் களத்தில் முதன்மை செய்தியாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


அதிமுகவும் அமமுகவும் தனித்தனியாக தேர்தலை சந்தித்த  நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமமுக 5 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளை பெற்றது அனைவரும் அறிந்ததே.  உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு 100க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களையும் அமமுக வென்றது. கணிசமான வாக்குவங்கியை வைத்துள்ள அமமுக கடந்த இரு தேர்தல்களிலும் பல இடங்களில் அதிமுக தோற்கவும் காரணமாக இருந்தது. 


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிபெற்ற திமுக, இப்போது கூடுதல் பலத்துடன் இருக்கிறது. பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவுக்கு வலுவான கூட்டணியும் இன்றி தவிக்கிறது. பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டு கொடுக்கும் நெருக்கடிகள் அதிமுகவை விழிபிதுங்க வைத்திருக்கிறது.


கடந்த இரு தேர்தல்களிலும் வலுவான கூட்டணியை அமைத்து, சிறப்பான வியூகங்களுடன் அதிமுகவை வெற்றிபெற வைத்தவர் சசிகலா. எனவே, தற்போதைய தேர்தலிலும் அவரின் பங்களிப்பு இருந்தால் நிச்சயமாக வெற்றிவாகை சூடலாம் என்று அதிமுகவின் ஒரு தரப்பினர் பேச தொடங்கினர்.


வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-அதிமுக இடையேயான வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதனால், ஒருவேளை அமமுக தனியாக நின்றால், அந்த கட்சி பிரிக்கும் வாக்குகள்தான் அதிமுகவின் தோல்விக்கு முதல் காரணமாக இருக்கும். ஆகையால், அதிமுகவையும் அமமுகவையும்  இணைத்தால் மட்டுமே,  வருகிற சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கான ஒரே ஆயுதம் என அதிமுக மட்டுமல்ல பாஜகவும் நம்புகிறது. 


தற்போது, அதிமுகவில் இருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள். முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் சசிகலாவால் உருவாக்கப்பட்டவர்கள். எனவே, அவர் விடுதலையாகி வரும் நேரத்தில், அதிமுகவில் காட்சிகள் மாறவும் வாய்ப்பு இருக்கிறது. அதனை ஈடுசெய்யும் விதமாகவே அதிமுக, இப்போதே காய்நகர்த்தல்களை தொடங்கி சசிகலாவுடனான உறவை புதுப்பிக்க விரும்புகிறது என்றும் சொல்லப்படுகிறது. 

அதிமுகவும் சசிகலாவின் உறவில் புதியதிருப்பம் உருவாகுமா என்பதைப் பொறுத்தியிருந்துதான் பார்க்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள் அதிமுக-அமமுகவின் தொண்டர்கள்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies